மூன்று சிறுவர்களும் குருகுல வாசம் முடித்து விட்டனர். யார் அந்த மூன்று சிறுவர்களா? ஒன்று பலராமன், இன்னொன்று கிருஷ்ணன், மூன்றாவது ஏற்கனவே அங்கு குருகுலவாசம் செயது கொண்டிருந்த பிராமண பையன் சுதாமா.
அவர்கள் குருகுல வாசம் ஆரம்பித்து சில வருஷங்கள் ஓடி போய் விட்டதே. அந்த உயரமான சிவப்பான பிராமண சிறுவன் போர்பந்தருக்கு திரும்ப போகிறான். மற்ற இருவரும் மதுராபுரி செல்லவேண்டும்.
இதோ விடிந்தால் மறுநாள் விடியற்காலை குரு பத்னி மாதா கட்டிகொடுக்கும் சோற்று மூட்டை வழி முழுதும் போதும் என்று சொல்ல முடியாது. எவ்வளவு நாள் பயணம் என்பதை பொறுத்திருக்கிறது. பார்த்துகொள்ளலாம். இருக்கவே இருக்கிறது மரங்கள் நதிகள் வழியெல்லாம், ஊரெல்லாம்.
குரு பத்னியிடம் விடை பெறும்போது நடந்த ஒரு சம்பவம் நமக்கு இப்போது கண் முன்னே நிற்கிறதே
"தாயே , இவ்வளவு காலம் என்னை பெற்ற தாயாய் வளர்த்து, உணவு அளித்து, உங்கள் குடிலில் தங்க இடம் கொடுத்து உடுக்க உடை அளித்து காப்பாற்றிய தெய்வமே நான் எவ்வாறு இதற்கெல்லாம் கடன் தீர்க்க முடியும். என்னால் உங்களுக்கு அளிக்ககூடியது எதாவது இருந்தால் சொல்லுங்கள். உடனே அதை நிறைவேற்றுகிறேன்” என்றான் கிருஷ்ணன்.
கண்களில் நீர் வடிய குருபத்னி தலை அசைத்தாள். சொல்லி என்ன பிரயோசனம். உன்னால் முடியப்போகிறதில்லை என்ற அர்த்தத்தில் அவள் தலை சோகமாக அசைந்தது.
“சொல்லுங்கள் தாயே” மீண்டும் கிருஷ்ணன் வலியுறுத்தினான்.
“இல்லை, கிருஷ்ணா ஒன்று மில்லை. எனக்கு உன்னை பிரிய மனமில்லையே அப்பா!”.
“நீங்கள் அவசியம் ஏதாவது எனக்கு கட்டளை இட வேண்டும் தாயே!”.
“கிருஷ்ணா, என் மனத்தை உன்னிடம் கொடுத்து விட்டேனே. அதை திருப்பியே தராதே!. என் மனம் மீண்டும் என்னிடம் வந்தால் அது என்னை வாட்டும். உன்னையே தேடும் நான் என்ன செய்வேன்?”.
ஆசையோடு பாசத்தோடு இறுகக் கட்டி ஆலிங்கனம் செய்து உச்சி முகர்ந்து அந்த முதிய குருபத்னி கிருஷ்ணனுக்கு விடை கொடுத்தாள்
குருவுக்கு நமஸ்காரம் செய்து, நீர் மல்க கிருஷ்ணன் சாந்திபனி முனி ஸ்ரேஷ்டர் முன் நின்றான்.
அவனை ஆசிர்வதித்து குரு சொன்னார்:
“கிருஷ்ணா, உனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தபோது என்னை அறியாமல் எனக்கு எப்போதுமே ஒரு மகிழ்ச்சி தோன்றியது. இத்தனை காலம் உன் மூலம் நானே சகலமும் அறிந்து கொள்வது போல தோன்றும். சூரியனுக்கு நான் ஒளி கொடுக்க முயற்சிப்பது போல் தோன்றும். நீ இங்கிருந்த இத்தனை காலமும் நாங்கள் இருவரும் சுவர்க்க வாசத்தில் இருந்தது போலவே தோன்றியதப்பா”.
“குரு தக்ஷிணை என்ன?'' என்று நீ கேட்டபோது என்ன சொல்வது என்று தோன்றவில்லை. உடம்பு ஆடிப்போய் விட்டது. நீ சிறந்தபுத்திமான். நீ என்னிடம் என்ன கற்றாய் என்று நினைக்கிறாயோ அதை அனைவருக்கும் உபதேசி. ஊருக்கும் உலகுக்கும் பயன்பட செய். உனக்கு ஆசிரியனாக இருந்த பாக்கியம் நான் எத்தனையோ ஜன்மங்களில் செய்த புண்ணியம் கிருஷ்ணா. என்னை தன்யனாக்கினாய்.
“அவ்வாறே குருநாதா. உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு பணிய ஆசி அருளுங்கள்”
“கிருஷ்ணா நீ என்று நினைவில் இருப்பாய்.!!”

No comments:
Post a Comment