ஒருதடவை ஆந்திராவில் மஹாபெரியவா முகாமிட்டு இருந்தபோது நடந்தசம்பவம் இது. வழக்கமான பூஜை நேரம். மஹான் சிறிய காமாக்ஷி உருவச்சிலையை முன்னால் வைத்து பூஜையை ஆரம்பித்து விட்டார்.
அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாக சத்தமிட்டுக்கொண்டு 'எனக்குபுடவைகொடு... புடவை கொடு!' என்று கூவினாள், ரகளைசெய்தாள்.
அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல் கந்தலாகக் காட்சியளித்தது. அவளின் இடது முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம் பெரிதாகவே கிழிந்திருந்தது
'பூஜை நேரத்தில் இப்படி ஒரு தொல்லையா?' என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை அங்கே இருந்து விரட்டத் தொடங்கினார்கள். அமைதியாக அவளைப் பார்த்த மஹான், அவர்களை பார்த்து கையமர்த்தி விட்டு, ஒரு புடவையைக் கொண்டு வரச்சொல்லி, அதைத் தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார். புடவையை எடுத்துக்கொண்ட அவள் அங்கிருந்து வேகமாகப் போய்விட்டாள். அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம்.
அவள் பின்னாலேயே வேகமாகப் போனார். ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தினை அந்த சிஷ்யர் கடந்தபோது, அவர் கன்னத்தில் யாரோ 'பளார்' என்று அறைந்தது போலிருந்தது!
அங்கேயே மயங்கி விழுந்தவர், பெரியவா இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று. ”என்னடா... புடவை என்னாச்சுனுபார்க்கப் போனியோ ? வந்தவ அம்பாள்டா ... மடையா”என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தைச் சுட்டிக்காட்டினார் மஹாபெரியவா. வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ, அதே இடத்தில் தான் தேவியின் சிலையில் உடுத்தப் பட்டிருந்த சேலையும் கிழிந்திருந்தது !
தனக்கு என்ன தேவை என்று மஹானிடம் நேரில் கேட்டு பெறும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!
No comments:
Post a Comment