சங்கும் சக்கரமும்



ஒருமுறை, தான் கொலு வீற்றிருக்கும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமானார். சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். வழக்கமாகத் தன் பாதுகைகளை துவார பாலகர்கள் அருகே விடும் பரந்தாமன், அன்று மட்டும் அவற்றைக் கழற்றி, ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது.

திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிபுங்கவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றார் பரந்தாமன். அப்போது, பாதுகைகளை அங்கேயே விட்டுவிட்டார்.

ஆதிசேஷன் மீது அலங்காரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அது அழகாகத்தான் இருந்தது. ஆனால், பாவம்... அருகிலேயே பாதுகைகளும் இருந்தன. இது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, ''கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே துவளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?'' என்று கேட்டன.

''இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்'' என்றன பாதுகைகள்.

''பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள்'' என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம்.

கிரீடம் இப்படிச் சொன்னதும் பாதுகைகளுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. ''நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்'' என்று வாதிட்டன பாதுகைகள்.

கிரீடம் விடுவதாக இல்லை. சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், அந்தக் கட்சி பலமுள்ளதாக இருந்தது. பாவம்... ஆதிசேஷன்! நடு நிலைமை வகித்து, இவற்றின் அறியாமையை எண்ணி, அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தார். தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பகவான் எப்போது வருவார், அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி நின்றிருந்தன.

பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன.

''இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சந்நிதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். சாதுக்களை ரக்ஷித்து, துஷ்டர்களை சம்ஹரித்து, தர்மத்தை நிலைநாட்ட நான் அவ்வப்போது பூமியில் அவதாரம் செய்வேன். அத்தகைய அவதாரங்களில் 'ஸ்ரீராமாவதாரம்’ நிகழும்போது, சக்கரமும், சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து, அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது!' என்றார் பகவான்.

சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே!

''ஒன்றிற் சிறியர் ஒன்றிற் பெரியராம் ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியராம்'' என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்க திருமுடியும், பாதுகையும் சங்கமமான கதையே பாதுகா பட்டாபிஷேகம்!

Sakthi

No comments:

Post a Comment

Instagram