தங்கக்கை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்


கி,பி,1870-ம் வருடம் ஜனவரி மாதம் 22-ம் தேதி சனிக்கிழமை சுவாமிகள் காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
தந்தை ஸ்ரீவாதிராஜ ஜோசியர்,தாய் திருமதி,மரகதம். சுவாமிகள் குழந்தையாக இருக்கும் காலத்தில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி விசாகம் தொடங்கியது.
ஒரு நாள் தாயார் மரகதம் நான்கு வயதுக் குழந்தை சேஷாத்திரியுடன் கோயிலுக்குச் சென்றார். வழியில் ஒரு பொம்மை வியாபாரி சிறிய நவநீதகிருஷ்ண விக்ரகங்களை ஒரு சாக்குப் பையில் கொண்டு வந்து வியாபாரம் செய்தான். சிறுவன் சேஷாத்திரி தன் தாயிடம் பூஜை செய்ய ஒரு விக்ரகம் வேண்டுமெனக் கூறி விக்ரகத்தைத் தொட்டான். வியாபாரியோ இப்போது தான் வியாபாரத்தை ஆரம்பிப்பதாகவும் குழந்தை இனாமாகவே எடுத்துக் கொள்ளட்டும் எனக் கூறி காசு வாங்க மறுத்து விட்டான்.  மறுநாளும் மரகதம் அம்மாள் சேஷாத்திரியுடன் கோயிலுக்கு செல்லும் போது வியாபாரி தாயின் கால்களில் வீழ்ந்து வணங்கி தங்கக் கை என்று சிறுவனின் கரங்களைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.  
பெரிய பெரிய திருவிழாக்களில் கூட 100 பொம்மைகள் விற்றாலே அதிகம் நேற்று ஒரே நாளில் 1000 பொம்மைகள் விற்றன.  குழந்தையின் கை தங்கக் கைதான் எனப் போற்றினார். மக்களும் சிறுவனை, தங்கக்கை சேஷாத்திரி என்றழைத்தனர்.
நாளாடைவில் சுவாமிகள் மூன்று வேளையும் குளிப்பார். இடையிடையே ஏதோ அசுத்தம் ஏற்பட்டதென்று சொல்லி அடிக்கடி நீராடுவார். ஊரார் இவரை நீர்க்காக்கை என்றழைத்தனர். எப்போழுதும் தீர்த்தப் பாத்திரத்துடன் இருப்பார். சக்கரத்தாழ்வார் சன்னதியில் உட்கார்ந்து ஜபம் செய்வார்.  காமாட்சி அம்மன் சன்னதியிலும் சுவாமிகளைக் காணலாம்.  சுவாமிகள் எண்ணெய் தேய்த்துக் கொள்வதில்லை. சுவாமிகளின் உபாசனை முறைகளைக் கண்டு சுற்றத்தார் அன்புத் தொல்லை தருவதால் சுவாமிகள் கோயிலில் ஜபம் செய்வதை நிறுத்தி விட்டு இரவில் மாயனத்திற்குப் போய் உபாசனைச் செய்து வந்தார். சுவாமிகளை வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள் கட்டி வைத்துப் பூட்டியும் பார்த்தார்கள். சுவாமிகளோ கதவை உட்பக்கம் தாளிட்டுக் கொண்டு மூன்று நான்கு நாள்கள் வரை திறக்க மாட்டார்கள். கட்டுப்பாடு அதிகரிக்க சுவாமிகளின் மாயன ஜபமும் அதிகரித்தது.
மாயன ஜபம் கூடாது என்று ஆட்சேபித்ததால் பரசுராம சேஷாத்திரியோடு சுவாமிகள் மூன்று மணி நேரம் வடமொழியில் தர்க்கம் செய்தார்கள். சுவாமிகள் நான் நைஷ்டிக பிரம்மச்சாரி உபாசகன். உபாசகனுக்கு கால தேச வார்த்தமானங்கள் கிடையாது என்று ஆதாரங்களைக் காட்டி பெரியவரைப் பதிலுரைக்க முடியாமல் செய்தார்.
பெரியவரோ மாயனத்திற்கு போய்விட்டு வீட்டிற்குள் நுழையக் கூடாது என்றார். சுவாமிகளும் அப்படியே என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறி கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருந்தார்.
அன்று சுவாமிகளின் தந்தைக்கு சிரார்த்த நாள் வெகுபாடுபட்டு சுவாமிகளை அவரது சித்தப்பா வீட்டிற்கு அழைத்து வந்தார். சுவாமிகளோ நான் சன்னியாசி சன்னியாசிகளுக்கு கர்மம் கிடையாது. தொல்லை தாரதீர்கள் என்று தடுத்தும் சித்தப்பா கேட்கவில்லை.
சுவாமிகளை ஓர் அறையில் தள்ளிப் பூட்டினார்.  சிராத்தம் முடிந்து பித்ருக்களிடம் ஆசி பெற வேண்டிய நேரத்தில் சித்தப்பா கதவைத் திறந்தார். உள்ளே சுவாமிகள் இல்லை.
மாயமாய் மறைந்து விட்டிருந்தார்.  ஊரேங்கும் செய்தி பரவியது. பெரிய மகானாக அல்லவா இருக்கிறார். அவரது அருமை தெரியாமல் இருந்து விட்டோமே என்று வருந்தினர்.
வீட்டை விட்டு மாயமாய் மறைந்த சுவாமிகள் சில காலம் மாமண்டூர் கிராமத்தில் உள்ள பஞ்ச பாண்டவர் குகையில் தவம் செய்தார்.
பின்னர்வேலூர்,வாணியம்படி,ஆவத்தம்பாடி,துரிஞ்சிக்குப்பம் வழியாக திருவண்ணாமலை வந்தடைந்தார்கள்.  சுவாமிகளுக்கு அப்போது பத்தொன்பது வயது.  1889ல் காஞ்சிபுரத்தை விட்டுப் புறப்பட்ட சுவாமிகள் முக்தியடைந்த 1929-ம் ஆண்டு வரை 40 ஆண்டுகள் திருவண்ணாமலையை விட்டு நகரவே இல்லை. சுவாமிகள் தன் தேகத்தை மறந்தனர். அழுக்கு மலிந்த ஆடைகள், நிலையாக ஒரிடத்தில் இருக்க மட்டார். 
தேரடி, சடைச்சி மடம், கோபுர வாயில், சிவ கங்கைப் படிக்கட்டு, சாது சத்திரம், முதலிய பல இடங்களிலும் இருப்பார்,எந்தக் கடைகளிலும் சுவாமிகள் நுழைவார்.  கல்லாவிலிருந்து காசுகளை அள்ளி விளையாடுவார். அன்று அந்தக் கடைக்காரர்களுக்கு யோக திசைதான்.
சுவாமிகளை ஒரு பெரிய ஞானியாகவே ஊர் மக்கள் மதித்தனார்.
பாவிகள் தம்மை வணங்குவதற்கு இடங்கொடுக்க மாட்டார், நல்வர்களைக் கண்டால் மனம் மகிழ்ந்து அன்பு காட்டுவார், ரமண மகரிஷி, வள்ளிமலை, திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் போன்ற மகான்கள் சேஷாத்திரி சுவாமிகளின் ஆசி பெற்றவர்களே,!
இவ்வாறு 40 ஆண்டுகள் திருவண்ணாமலையில் நடமாடும் தெய்வமாய் விளங்கிய சுவாமிகள் 4-1-1929-ல் சிவனடியாராகிய சின்னக் குருக்கள் வீட்டுத் திண்ணையில் மகா சமாதியடைந்தார்,
ஜீவசமாதி அமைந்துள்ள இடம் திருவண்ணாமலையில் மலைக்குத் தென்புறம் செல்லும் கிரிவலப் பாதைக்கு செங்கம் சாலை என்று பெயர். அச்சாலையின் கிழக்குப் பாகத்தில் சாலைக்கு வடப்புறம் ஸ்ரீ சேஷாத்திரி ஆஸ்ரமம் அமைந்துள்ளது. அவ்வாஸ்ரமத்துள் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் சமாதிக் கோயில் அமைந்துள்ளது.

Sakthi

No comments:

Post a Comment

Instagram